Friday, August 26, 2011

அம்மாவும் அப்பமும்

என் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் அப்பம் என்றால் கொள்ளை ஆசை.

ஒவ்வொரு வருடமும் கிருக்ஷ்ண ஜெயந்தி என்றால் எனக்கு பதட்டம் தான். மற்ற பட்ச்சணங்கள் எல்லாம் கூட செய்து விடுவேன், ஆனால் இந்த அப்பம் மட்டும் செய்ய வருவதில்லை. எனக்கு திருமணம் ஆகி இருவது வருடங்கள் ஓடிவிட்டன. மகனும் மகளும் கல்லூரிக்கு  போகின்றனர். ஆனால் இன்றைக்கும் எனக்கு அப்பம் ஒழுங்காக செய்ய வருவதில்லை. ஒவ்வொரு வருடமும் என் அப்பம் மட்டும் என்னை காலை வாரி விட்டுவிடும்.

கிருக்ஷ்ண ஜெயந்திக்கு அரசு விடுமுறை என்பதால் என் கணவரும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பார்கள். நான் தனியார் துறையில் இருப்பதால், எனக்கு   பெரும்பாலும் விடுமுறை கிடைகாது. ஒரிரு மணி நேரம் அனுமதி கேட்டுகொண்டு வீட்டிற்கு வருவதே என் வழக்கம்.

"அம்மா இந்த தடவையாவது ஒழுங்காக அப்பம் செய்வியா?" என்று ஏக்கத்துடன் கேட்பான் என் பிள்ளை. "எதற்கும் உன் அம்மாவை ஒரு தடவை கேட்டுக்கொள்" இது என் கணவர். "எல்லாம் எனக்கும் தெரியும்", என்று நான். எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கும் தோரணையுடன் நிற்பாள் என் பெண். இப்படிதான் ஒவ்வொரு வருடமும் தொடங்கும் நான் அப்பம் செய்யும் கதை.

அப்பத்திற்கு மாவு கரைக்கும் போதே எனக்கு சந்தேகம் வந்துவிடும்.  மைதாவா, கோதுமை மாவா, உளுத்தமாவா அரிசி மாவா என்பது,  அளவும் புரிபடாது. என் பிள்ளை கடைக்கு ஓடுவான், வீட்டில் ஏதாவது பொருள் குறைந்தால்.

எண்ணை காயும் போதே பக்கத்தில் வந்து நின்று கொள்வார்கள், மகனும் மகளும். அடுப்படியை விட்டு நகர மாட்டார்கள். எல்லா கடவுள்களையும் வேண்டி கொண்டு எண்ணையில் நான் கரைத்த மாவை விடுவேன் நான்.

"போச் போச் , இந்த தடவையும் அப்பம் போச்" என்று கத்துவாள் என் மகள். "பாட்டிக்கு போன் போடுடி" என்பான் இவன். "வேண்டாம், நான் நேரில் சென்று அழைத்து வருகிறேன்" என்று வண்டியை எடுத்துகொண்டு ஒடுவார் என்னவர்.

இரண்டு தெருக்கள் தள்ளியிருந்தனர் என் பெற்றொர். மருமகன் கூப்பிட்டவுடன் போட்டது போட்டபடி ஓடி வருவாள் என் அம்மா. அடுப்பில் எண்ணை காய்ந்தபடி இருக்கும். முதலில் அடுப்பை அணைப்பாள். ஒரு சிணுங்கல் இருக்காது. ஏன் முதலில் கேட்கவில்லை என்ற சலிப்பு இருக்காது. நான் கரைத்த மாவில் என்ன குறை என்று கண்டுபிடிப்பாள். நானும் இதுதான் சமயம் தப்பித்தால் போதும் என்று நகர்ந்து விடுவேன். சாமர்த்தியமாக நான் கரைத்த மாவில் ஏதேனும் மாற்றம் செய்து நல்ல அப்பமும் செய்து விடுவாள் அம்மா. முன்பே தயாராக இருந்திருப்பாளோ என்று எனக்கு சந்தேகம் வரும்.

கூடவே தான் செய்து கொண்டு வந்திருந்த அப்பத்தையும் பிள்ளைக்களுக்கு தருவாள். "பாட்டி வீட்டு அப்பத்தின் சுவை தனி தான்" என்று அவர்கள் சொல்லுவதை கேட்கவே எரிச்சலாக இருக்கும் எனக்கு. "உன் அம்மாவும் இதேபோல் அடுத்தமுறை செய்துவிடுவாள் பாரேன்" என்று அவள் பேரனிடம் என்னை விட்டுகொடுக்காமல் சொல்லும்போதும் நான் அவளை கோபத்துடன் முறைப்பேன்.

இந்த வருடம் அம்மா சென்னையில் உள்ள என் அக்கா வீட்டிற்கு சென்று விட்டாள். என் குடும்பத்தில் ரொம்பவே பயந்து போயினர் நான் என்ன அமளி செய்வேனோ என்று. என்னவர் என்னை இந்த முறை விடுப்பு எடுக்க வைத்தார். தன் தமக்கையிடம் கேட்டு தேவையானவற்றை வாங்கி வைத்து விட்டார்.

நான் குளித்துவிட்டு அடுக்களை உள்ளே நுழையும்  போது சரியாக தொலைபேசி அழைத்தது. என் அக்காவின் குரல் பதட்டத்துடன் ஒலித்தது. அம்மாவிற்க்கு  திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக. உடனே எல்லோரும் சென்னைக்கு விரைந்தோம். என் கணவர் காரோட்ட நாங்கள் மருத்துவமனையை அடையும் போது மணி ஆறு இருக்கும்.

அம்மா தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்ததால், ஒருவர்க்கு மட்டுமே அனுமதி கொடுக்கபட்டது. நான் மட்டும் உள்ளே சென்றேன்.  அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்துகொண்டேன். மெள்ள கண் விழித்து பார்த்தாள் அம்மா.."அப்பம் செய்தாயா..நன்றாக வந்ததா?" என்று பலகீனமான குரலில் கெட்டாள்.
"நீ இல்லாமல் எப்படி அம்மா அப்பம் நன்றாக வரும்?" என்றேன் நான் கண்ணீருடன், அம்மா மெல்ல சிரித்தாள்.

1 comment:

  1. உங்க அனுபவத்த சிரிச்சுட்டே படிக்கும் போது அம்மாவின் மருத்துவநிலை கண்டு வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை

    ReplyDelete