Saturday, October 6, 2012

ஒரு தாயின் வாழ்த்து

"வீல்" என்று குழந்தையின் அழுகுரல். பிறந்து பதினைந்தே நாள் வயதான என் பிள்ளை அழும் குரல் தான் அது. ஓடோடி சென்று வாரி அணைத்து கொள்ள முடியாமல், தூரமாக கண்ணாடி கதவிற்கு அப்பால் நின்று துடித்தபடி நான். .

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் குழந்தை நல மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவின் வெளியே தான் நின்று கொண்டு இருந்தேன். உள்ளே ஒரு மேசையில் என் செல்வத்தை சுற்றிலும் ஐந்தாறு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்  நின்று கொண்டிருந்தார்கள். அந்த மேசை மேலே அறுவை சிகிச்சையின் போது  பயன் படுத்த படும் பெரிய மின்சார விளக்கு. விடாமல் அழுது கொண்டிருந்தான் என் செல்லம். 

 எல்லாமே நன்றாகத்தானே இருந்தது...இரண்டு நாள் முன்பு தான் விமரிசையாக பெயர் சூட்டும் விழா வீட்டில் நடந்தது.....இன்று அந்த குழந்தை உயிருக்கு போராடியபடி அவசர சிகிச்சை பிரிவில் ...ஒன்றுமே புரியவில்லை எனக்கு. ஏன் இப்படி ..என் குழந்தைக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி மீண்டும் மீண்டும் ..மனம் பதை பதைக்கிறது ..என் பிஞ்சிற்கு மட்டும் ஏன் இந்த துன்பம்? வாய் விட்டு சொல்ல கூட தெரியாத பிறந்த குழந்தை ஆயிற்றே.. 

ஏதேதோ நினைத்து நினைத்து அழுதபடி நான் நின்று இருந்தேன், கண்களில் கண்ணீர் ஆறாக வழிந்து கொண்டிருந்தது. உள்ளே குழந்தையின் அழுகை ஒலி  சற்று குறைந்த மாதிரி இருந்தது. மருத்துவர்கள்  சற்று ஒதுங்கி நின்று பேசி கொண்டிருந்தனர். என் செல்வத்தின் கையிலும் மூக்கிலும் குழாய்கள் செருக பட்டு இருந்தது.  

சிறிது நேரம் கழித்து அவர்களில் இருந்து ஒரு மூத்த மருத்துவர் மட்டும் வெளியே வந்தார். என் கணவரிடம் ஏதொ கூறி, என்னையும் கூட  வர செய்து தம் அறைக்கு அழைத்து  சென்றார். என் கணவரை தன்னுடைய பெரிய இருக்கையில் உட்கார வைத்தார். அப்போதே எதோ விபரீதமாக சொல்ல போகிறார் என்று தோன்றியது. நான் நோயாளிகள் அமரும் சிறிய நாற்காலியில் அமர்ந்தேன். அவர் உட்காரவில்லை. அங்கிருந்த மேசையில் சாய்ந்து நின்றபடியே ஏதேதோ சொல்லி கொண்டிருந்தார். என் மூளைக்கு எதுவும்  எட்டவில்லை. எனக்கு புரிந்ததெல்லாம் ஒன்று தான். உடனடியாக எங்கள்  செல்லத்திற்கு  அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதுவும் ஐந்தாறு மணி நேரத்திற்குள்..என்னால் தாங்க முடியவில்லை. பூ போன்ற பிஞ்சு அது ..தாங்குமா? அய்யோ ..என்ன கொடுமை இது? 

"டாக்டர், அறுவை சிகிச்சை செய்தால் குழந்தைக்கு  சரியாகி விடுமா? " என்று கேட்டார் என் கணவர். என்ன சரியாகி விடும்... இப்போது  அவனுக்கு என்ன சரியாக இல்லை..எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

"இப்போது ஒன்றும் சொல்லுவதற்கில்லை. அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும். அதுவும் உடனடியாக செய்ய வேண்டும். இல்லை என்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து. அறுவை சிகிச்சை செய்தால் குழந்தை  உயிர் பிழைக்கலாம்...ஆனால் அறுவை சிகிச்சையும் நிரந்தர தீர்வு அல்ல. இப்போதைக்கு ஆபத்தான கட்டத்தை தாண்ட முடியும்..ஆனால் அதன் பின் மற்ற குழந்தைகள் மாதிரி  சாதாரணமாக இருப்பான் என்றும்   தீர்மானமாக சொல்ல முடியாது. இப்போதைக்கு என்னால் உத்திரவாதமாக எதுவும் கூற முடியாது. "  உணர்ச்சியற்ற குரலில் பதில் சொன்னார் மருத்துவர்.

எனக்குள் ஏதோ  ஒன்று சுக்கு நூறாக உடைந்து போனது. கண்ணீரை துடைத்து கொண்டு ஜடம் மாதிரி மருத்துவர் நீட்டிய படிவத்தில் கையொப்பம் இட்டுவிட்டு, கழுத்திலும் கைகளிலும் இருந்த சொற்ப தங்கத்தை கழட்டி கணவரிடம் கொடுத்துவிட்டு என் செல்லத்தின் அருகில் வந்தேன் . அழுது அழுது களைத்து போய் மயக்கத்தில் கண் மூடி படுத்து இருந்தான் என் செல்லம். எனக்கு அவனை தொட கூட தைரியம் இல்லை, தொட்டால் விழித்து கொண்டு அழுவானோ என்று தொடாமல் வெறுமே அந்த பால் போன்ற பட்டு முகத்தை பார்த்தபடி நின்றேன். 

சிறிது நேரம்  கழித்து சீருடை அணிந்த பணியாளர்கள் வந்து மேசையை  தள்ளி கொண்டு என் செல்லத்தை அறுவை சிகிச்சை அறைக்குள் கொண்டு சென்றனர். பிறந்து சில நாட்களே ஆன பிஞ்சு குழந்தையை அறுவை சிகிச்சைக்கு அனுப்பி விட்டு வெளியே காத்திருக்கும் கொடுமை ...அப்பப்பா ..யாருக்கும் இந்த நிலை வர கூடாது.
எத்தனை நேரம் ஆயிற்று என்று தெரியவில்லை ....என் செல்லத்தை மீண்டும் பார்த்தேன் ..... மூக்கில், வயிற்றில், கையில் குழாய்கள் செருக பட்டிருந்தது. நினைவு இருப்பதற்கு  அடையாளமாக  தலையை இப்படியும் அப்படியும் உருட்டி கொண்டிருந்தான் குழந்தை. கண்கள்  அரை குறையாக திறந்தபடி இருந்தது. அவன் கைகளையும், கால்களையும் அசைக்க முடியாத படி டேப்பை கொண்டு மேசையோடு ஒட்டி இருந்தனர். மயக்க மருந்து கொடுத்த பின்னும் ரொம்ப கையையும் காலையும் உதைத்து கொண்டானாம். சிறிய குழந்தை ஆனதால், மேலும் மேலும் மயக்க மருந்து கொடுத்தால் ஆபத்து ஆகலாம் என்று, அவனை மேசையோடு வைத்து கட்டிவிட்டு இருந்தனர். 

பாவம் போதிய மயக்க மருந்து கூட இல்லாமல் எவ்வளவு வலித்ததோ....எப்படி தாங்கினானோ .....என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை ......பெற்றோர் செய்த பாவம் பிள்ளைக்கு என்பார்களே ...நான் செய்த பாவம் தான் என் பிள்ளையை தாக்கி விட்டதா?  யாருக்கு என்ன கேடு விளைவித்தோம் ? என்ன பெரிய தவறு செய்து விட்டோம் ? அப்படி ஏதும் பெரிதாக பாவம் செய்து விட்டதாக நினைவில்லையே?   பின் ஏன் என் பிள்ளைக்கு இந்த நிலைமை ..இந்த வலி? என் பிள்ளையாய்  பிறந்ததே இவன் செய்த குற்றமா? என் ராஜகுமாரன் வேறு எங்காவது பிறந்து நல்ல படியாக வளர்ந்து இருக்க கூடாதா? 

  "குழந்தை பசியில் அழும்..ஆனால் இன்னும் பனிரெண்டு மணி நேரத்திற்கு பால் கொடுக்க கூடாது..." மருத்துவரின் அறிவுரை. இரக்கமற்ற வார்த்தைகள்...பசியால்  குழந்தை  இடை விடாது  அழும், ஆனால் பால் கூடாது ..என்ன கொடுமை ..அழுது அழுது அயர்ந்து போய் மயக்கத்திலேயே இருப்பான் அவன். உயிர் காக்கும் திரவங்கள்  குழாய்கள் மூலம் செலுத்த பட்டு கொண்டிருந்தன. தீவிர கண்காணிப்பு பிரிவில்  ஒரு வாரம்  இருந்தான் குழந்தை. கண்ணீர் வற்றி போய், மனமும்  பாறையாக  இறுகி போயிருந்தது. எப்படியாவது பிள்ளையை காப்பாற்ற வேண்டும் என்ற வெறி மட்டும் தான் அப்போது மனதில் இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து மூக்கில் இருந்த குழாய் எடுக்கப்பட்டது. பால் ஒவ்வாமை மற்றும் இரத்தத்தில் சர்க்கரை  அளவு மிகுந்து இருந்ததால் தாய் பால் கொடுக்கக கூடாது என்று காதில் இரும்பை காய்ச்சி ஊற்றினார் மருத்துவர். இறக்குமதி செய்யப்பட்ட தனிவகையான ஒரு உணவுதான் அவனுக்கு.

  அவன் உடல் நிலையில் மருத்துவர்கள் எதிர்பார்த்த மாற்றம் வரவில்லை. அறுவை சிகிச்சை தோல்வி என்றனர். மீண்டும்  ஒரு முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், ஆனால் குழந்தை அதை தாங்குவதற்கு சிறிது நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றனர், அதுவரை வயிற்றில் உள்ள குழாயை அகற்ற முடியாது என்று கூறி விட்டனர்.


பொது வார்டுக்கு வந்து விட்டோம். இவனையும் சேர்த்து பதினாறு குழந்தைகள். இவன் தான் அவர்களில் மிக சிறிய குழந்தை. எதுவுமே  நடக்காத மாதிரி கையையும் காலையும் உதைத்து விளையாடுவான். கண்களை உருட்டி உருட்டி பார்ப்பான். காலையிலும் மாலையிலும் மருத்துவர் குழு வரும். அவர்களை தன் வயிற்றில் கை வைத்து பார்க்க விடாமல் கையாலும் காலாலும் உதைப்பதை பார்த்து ஒரு மருத்துவர் அவனை "ரஜினிகாந்த்" என்று கொஞ்சுவார். அவனுகென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமும் சேர்ந்தது. இவன் கைகால்களை அசைத்து விளையாடுவதால் கையில் உள்ள ஐவி குழாய் கழண்டு விடும். டாக்டர்கள் மீண்டு அதை பொருத்தும்போது வலியில் கத்தி அழுவான். பிறகு திரும்ப விளையாட்டு. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை சொல்லாமல் சொல்லும் அவன் சேட்டைகள்.



நாட்கள் கழிந்து வாரங்கள் ஆனது. அந்த வார்டில் இருந்த பிற நோயாளி குழந்தைகள் நலமாகி வீட்டிற்கு  திரும்ப செல்லும் போது    நான் என் பிள்ளையை கூட்டிக்கொண்டு எப்போது இங்கிருந்து போக போகிறேன்  என்று ஏக்கமாக இருக்கும். எனக்கும் பிரசவமாகி இரண்டு மாதம் கூட ஆகாத நிலையில் சரியான ஒய்வு இல்லாமல் உடல் சோர்வும் சேர்ந்து கொண்டு மனசோர்வை அதிகமாக்கி கொண்டிருந்தது. 

அவனுக்கு நாற்பத்தைந்து நாட்கள் ஆகும் போது அடுத்த அறுவை சிகிச்சை. திரும்பவும் அதே  கெட்ட கனவை வாழ்ந்து பார்க்கும் கொடுமை. இந்த முறை இவன்  "வளர்ந்து" விட்டதால் அழுகையும் அதிகமாக இருந்தது. வலியாலும், பசியாலும் அவன் அழும் பொது மனம் துவண்டு போகும். எதற்கு என்  குழந்தைக்கு மட்டும் இந்த சோதனை ...விடை தெரியாமல் சிந்தித்து சிந்தித்து மனம்  ஓய்ந்து போனது. 

  ஒரு நாள் மதிய நேரம். ஆறாம் மாடியில் உள்ள அறையில் அவனுக்காக உணவு தயாரிக்க சென்று இருந்தேன். குழந்தை நோயாளிகள் உள்ள அறைகளில் சாப்பிட கூடாது.   சுகாதாரம் கருதி உணவை சூடாக்கும் வசதியும் கொடுக்க படவில்லை. ஆறாம் மாடியில் உள்ள அந்த பொதுவான அறையில் தான் மற்ற எல்லாரும் உணவு தயாரிக்க வேண்டும், சாப்பிட வேண்டும். அங்கிருந்த மின்சார அடுப்பில் குழந்தைக்கான உணவை தயாரித்து கொண்டே அழுது  கொண்டிருந்தேன். என்னவோ தெரியவில்லை அன்று ரொம்ப மன சோர்வாக இருந்தது. அழுகை நிற்கும் வகையாக தெரியவில்லை. 

தோளில் ஆதரவாக  ஒரு கை, திரும்பி பார்த்தேன், இருபத்தியைந்து வயது இருக்கும், என்னை போலவே ஒரு பெண்.

"மகனா?" என்று கேட்டாள். ஆமாம் என்று தலையாட்டினேன். அந்த அறைக்கு பெரும்பாலும் தம் பிள்ளைகளை சேர்த்து இருக்கும் தாய்கள்  தான் வருவார்கள். 

"எனக்கும் தான்" என்றாள். என் காதில் விழவில்லையோ? 

"என்ன ஆயிற்று குழந்தைக்கு ?" என்று மிகவும் கனிவாக கேட்டாள் .

அவ்வளவு தான், மடை திறந்த வெள்ளம் போல் என் மனதில் இருந்த சோகத்தை கொட்டினேன் , என் பிள்ளை படும் பாட்டை விவரித்து அழுதேன்.

"கவலை  படாதே ...அடுத்த அறுவை சிகிச்சை செய்தாயிற்று அல்லவா ..எல்லாம்  சரியாகி விடும் .." என்று மென்மையாக சொன்னாள் 

"இல்லை" என்றேன்  நான். "இது  கூட தாற்காலிகமானது தான்..  ஐந்து அல்லது ஆறு வயதில் மீண்டுமொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமாம்." என்றேன் தேம்பியபடி.

"அப்போது சரியாகிவிடும் அல்லவா .." என்றாள் 

"அப்படிதான் மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்" என்றேன் .

"அவ்வளவு தானே ..இன்னும் சில வருடங்கள் தானே ..கண்டிப்பாக குழந்தை தேறி விடுவான். தைரியமாக இரு ..மனதை தேற்றி கொள் ..குழந்தையை நல்லபடியாக பார்த்து கொள் " என்றாள். 

எனக்கு வெறுமையாக இருந்தது. சொல்லுவது சுலபம். அனுபவிப்பவர்களுக்கு  தானே வலி தெரியும், இவளுக்கு என்ன புரிய போகிறது? 

"நீங்கள் ...? இங்கே, எங்கே .?  நான் ரொம்ப நாட்களாக இருக்கிறேன் ..ஆனால் உங்களை பார்த்ததில்லை ...?" பார்வையாளராக இருப்பாள் போலும் என்று நினைத்தபடி கேட்டேன். அவள் நகைகளையும் சேலையும் பார்க்கும் பொது நல்ல பணக்கார வீட்டு பெண் போல தெரிந்தது.


"நான் எட்டாம் எண் அறையில் இருக்கிறேன், என் மகனுடன் " என்றாள் . நான் நினைத்து சரிதான். அது விஐபிகளுக்கான அறை. வசதியான பெண் தான்.

"என்ன வயது உங்கள் மகனுக்கு"

"நாலு மாதம்"

"என்ன ஆயிற்று குழந்தைக்கு?" 

சுரம் அல்லது வயிற்று போக்கு மாதிரி எதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்தேன். 

"இரத்த புற்று நோய்" என்றாள்.

"என்ன ...?" அதிர்ந்து போனேன்.

"குணமாக்க  முடியாது என்று சொல்லிவிட்டார்கள் ..இன்னும் ஒன்று இரண்டு மாதங்கள் உயிரோடு இருப்பானாம்.." அமைதியாக சொன்னாள் ..

என் கண்களில் நின்றிந்த கண்ணீர் மீண்டும் பெருக ஆரம்பித்தது. என்னால் கேட்கவே முடியவில்லையே. இவளால் எப்படி தாங்க முடிகிறது ...

"திருமணமாகி ஏழு வருடம் கழித்து தான் பிறந்தான். ...அடிக்கடி சுரம் வந்து கொண்டே இருந்தது. டைபோய்ட், மலேரியா,  காமாலை என்று எதுவும் இல்லை என்ற பிறகு, எதற்கும் பார்ப்போமே என்று சந்தேகத்தோடு மருத்துவர்கள் புற்று  நோய்க்கான டெஸ்ட் செய்து பார்த்தனர். இரண்டு வாரங்கள் தான் முன்பு தெரிந்தது. முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள். இருந்தாலும் பெரிதாக நம்பிக்கை ஏதும் கிடையாது...? என்றாள்.

அவள் கண்கள் வறண்டு இருந்தன. "அழாதே...." என்று என் கண்களை துடைத்து விட்டுவிட்டு  சொன்னாள். "ஐந்தாறு வருடங்கள் நிமிடமாக கடந்துபோய் விடும். உன் பிள்ளை சீக்கிரமே  தேறி விடுவான்..அதன் பின் பெரிய ஆளாக வருவான் பாரேன். இங்கேயே கூட மருத்துவராக திரும்பி வருவான்  " என்றாள்.

என்னை தேற்றுகிறாளே, நான் என்ன என்று அவளுக்கு ஆறுதல் சொல்லுவது? இடி போன்ற துயரத்தை தாங்கி கொண்டு அமைதியாக நிற்கும் பெண்ணை பார்த்து தேறுதல் சொல்ல வார்த்தை இல்லாமல் ஆடி போய் நின்றேன். ஆம், என் மகன் தேறி விடுவான். என் துன்பம் இவள்  எதிரில் இன்றுமே இல்லை.

சிறிது நேரம்  கழித்து திரும்பி வந்து போது வழக்கம் போல  கை காலை உதைத்து கொண்டு சிரித்து கொண்டிருக்கும் என் பிள்ளையை  பார்த்தேன்.. 

"என் செல்லம்..உனக்கு ஒன்றும் இல்லை ..சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும்" என்று வாரி அணைத்து புன்னகையுடன் முத்தமிட்டேன்.

இன்று அவன் வளர்ந்து மருத்துவக் கல்லூரியில் படிக்கிறான், மருத்துவர் அங்கியை அணிந்து கொண்டு பெருமையாக நடமாடும் போது ஏனோ அந்த பெயர் தெரியாத தாயின் முகமும் வாழ்த்தும் நினைவிற்கு வருகிறது. 

 

Thursday, January 5, 2012

புத்தகத்தை தேடி

 வேலை நிமித்தமாக கத்தார் வந்து சிறிது காலம் ஆகின்றது, தனியாக இருக்கிறேன், குடும்பம்  சென்னையில். வயதின் காரணமோ அல்லது வளர்ப்ப்பின் காரணமோ தெரியவில்லை பார்ட்டிகளுக்கு  போவதிலோ   அல்லது   ஓயாமல் ஷாப்பிங் செய்வதிலோ எனக்கு  நாட்டம் இல்லை.   நண்பர் வட்டமும் இங்கு மிகவும்  குறைவு.  சென்னையில் இவ்வாறு தனிமை கிடைப்பது மிக மிக அரிது. அப்படி கிடைத்தால் உடனே குஷியாக ஹிக்கின்போதம், ஒடிசி அல்லது லாண்ட்மார்க் சென்று விடுவேன்.  பல  நாட்களாக வாங்க நினைத்திருந்த  புத்தகங்களை வாங்கி வருவேன். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல்,   குளிக்காமல்,  சமைக்காமல், அகப்பட்டதை கொறித்துக்கொண்டு  படித்துக்கொண்டே  இருப்பேன். சில சமயம் பசங்களும் பெரியவர்களும் இல்லாமல் நானும் கணவரும் மட்டும் வீட்டில் இருக்கும் நாட்கள் உண்டு. அப்போதும் இப்படிதான்.  அவரும் பெரும்பாலும் நான் அவரை தொந்திரவு செய்யாதவரை கண்டு கொள்ள மாட்டார். தூங்காமல்    நள்ளிரவில் படித்தால் மட்டும் கடிந்து கொள்வார்.

இந்த முறை  திடீரென்று கிளம்பி வந்ததால் நான் புத்தகம் எதுவும் கையில் கொண்டு வரவில்லை. எப்போதும் இது போன்ற பயணங்களில்  விமான நிலையத்தில் கண்டிப்பாக ஏதேனும் புத்தகம் வாங்கி  விடுவேன். இந்த முறை நான் மிகவும் தாமதமாக விமான  நிலையதிற்கு   வந்ததால் அதற்கும் நேரமில்லை. சரி  தோஹாவில்  எதாவது கடையில் வாங்கி கொள்ளலாம்  என்று நினைத்தேன்.  ஆனால்   இங்கே வந்த பின் தான் தெரிந்தது அது அப்படி ஒன்றும் சுலபமில்லை என்று.     தோஹாவில்   புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலுவலகத்தில் கேட்ட போது சிலர் என்னை விசித்திரமாக பார்த்தனர்.  வேறு சிலர் எதற்கு புத்தகம் வாங்க வேண்டும் என்று கேட்டனர். இன்னும் ஒருவர் இங்கு புத்தக கடையே தேவையில்லை, ஏனென்றால் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு தேவையான      புத்தகங்களை தந்து விடுவார்கள் என்று பெருமையாக சொன்னார்.  அவருக்கு பள்ளி     பாட  புத்தகங்களை தவிர வேறு புத்தகம் இருப்பதே தெரியவில்லை, புரியவும் இல்லை.  இன்னொருவர்   இணைய தளத்தில்  பார்த்து கொள்ளுங்களேன் என்றார். 

எனக்கு இணைய தளத்தில் படிப்பதில்அல்லது புத்தகம்  தேடுவதில்   ஆர்வமில்லை.  ஒரு புத்தகக்கடையில் புத்தகத்தை புரட்டி புரட்டி பார்த்து தேர்ந்து எடுக்கும் சுகம் அதில் கிடைக்குமா? அல்லது நூலகத்தில் கை நிறைய அள்ளிக்கொண்டு   வரும்   பூரிப்பிற்கு   இணையாகுமா? 

சென்னையில் தான் எவ்வளவு நூலகங்கள் - கன்னிமாரா ,  பிரிட்டிஷ் கௌன்சில், மட்டும் அரசு மாவட்ட நூலகங்கள்.. இன்னும் நான்  கோட்டூர்புறத்தில்   உள்ள புதிய பிரமாண்டமான நூலகத்திற்கு செல்லவில்லை.  நான் போவதற்கு முன் அது மருத்துவமனையாக  மாறி விடுமோ தெரியவில்லை ..இதை தவிர அங்கங்கே எண்ணற்ற தனியார் நூலகங்கள். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்  தெருக்களில்  கிடைக்கும் அந்த பழைய  புத்தகங்கள், அடையாரில் இருக்கும் முருகன் லைப்ரரி... ஆஹா  நினைக்கும் போதே இனிகிறதே. இப்போதுதான்    தெரிகிறது சென்னையின் அருமை. ஒன்றுமே இல்லை என்றால் தெருவோரத்தில் ஏதேனும் வாராந்தரி  பத்திரிக்கையாவது கிடைக்கும்.. ஆனால் இங்கு...?  ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் வளர்ச்சி என்பது என்ன ?  மிக  உயரமான   கட்டிடங்கள்,  அதி நவீனமான புதிய  கார்கள், தங்கு தடை இல்லாத  மின்சாரம்,  தண்ணீர்,  மனிதற்கு  மாற்றாக  கருவிகள்,   எதற்கு  எடுத்தாலும்  கணினிகள்,  நீண்ட அகன்ற  சாலைகள், உணவு விடுதிகள், ஷாப்பிங்  மால்கள் இவை மட்டும் தானா? மனது ஒப்புகொள்ள மறுக்கின்றது.   புத்தகங்கள் இல்லாத ஒரு வாழ்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.   இவ்வளவு  பெரிய  ஊரில்  ஒரு  நல்ல   புத்தக  கடை இல்லையே என  நினைக்கும் போது  இங்கு  இருப்பவர்கள்   எவ்வளவு இழக்கிறார்கள் என்று வருந்துகிறேன்.  இங்கு வளரும்  குழந்தைகள் எப்படி புத்தகம் படிப்பார்கள்? அவர்களுக்கு எப்படி அந்த  பழக்கம் ஏற்படும்? புரியவில்லை.

சரி இப்படி புத்தகம் தேடிக்கொண்டு  நான் மட்டும்  ஏன் வித்தியாசமாக  இருக்கிறேன்  என்று யோசித்தேன்.  இந்த பழக்கம் சிறு வயதில் என் தந்தை ஏற்படுத்தியது.  சிறு வயதில்   எனக்கு  அப்பா  என்றாலே  அப்பாவும் அப்பாவின் கையில் உள்ள புத்தகமும் தான் நினைவுக்கு வரும். அம்மாவும் படிப்பார், ஆனால்  அப்பா படிக்கும் விதமே அலாதியானது. காலையில் சீக்கிரம் எழுந்து காலைகடன்களை  முடித்துவிட்டு பேப்பர் போடுபவன் வருகைகாக தயாராக காத்திருப்பார். பேப்பர் வந்தவுடன் எடுத்துகொண்டு வீட்டில் பின் புறத்தில் உள்ள வெந்நீர் அடுப்பின் பக்கம் சென்று அமர்ந்து கொள்வார். அவரையும் சேர்த்து வீட்டில் ஏழு உருபிடிகள்.. சில நேரம் விருந்தினர் வந்தால் பத்து பேர் கூட இருப்போம். எல்லோரும் குளித்து முடிக்கும் வரை அந்த சுள்ளி அடுப்பையும் பார்த்துகொண்டு, அன்றைய தினசரியையும் படிப்பார். அதே நேரம் வேலிக்கு அந்த புறம் பக்கத்து வீட்டில் அவருடைய நண்பரும் இருப்பார். இருவரும் படித்துக்கு கொண்டே கார சாரமாக விவாதிக்கவும் செய்வார்கள்.

மாலை அலுவல் முடிந்து வீடு வரும் போது ஏகப்பட்ட  பத்திரிகைகளுடன்  வருவார்.   எல்லா  வயதினர்க்கும் ஏற்ற வகையில் அதில் புத்தகங்கள் இருக்கும். அம்புலி மாமா, பாலமித்ரா, அமர்சித்ர கதை, குமுதம், விகடன், கல்கண்டு, கல்கி, சாவி, அமுதசுரபி,  இதயம் பேசுகிறது, மங்கை, கதிர், ராணி, தேவி, காமிக்ஸ், மற்றும் பல ஆங்கில பத்திரிகைகளும் அடங்கும்.  என் தந்தை  நெய்வேலியில்  பழுப்பு  நிலக்கரி   நிறுவனத்தில்  சாதாரண  வேலையில்  தான்   இருந்தார். ஆனாலும்   புத்தகங்களுக்கு  வீட்டில் வஞ்சனையே கிடையாது.  சிறு வயதில் அதன்    அருமை தெரியவில்லை இருந்தாலும் இப்போது நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது,   அவருடைய சொற்ப சம்பளத்தில் அவர் புத்தகங்களுக்கு  எவ்வளவு   மதிப்பளித்தார்    என்பது இப்போது தான் புரிகின்றது


தினசரி, வார மற்றும் மாதந்திர பத்திரிகைகள் வாங்குவது மட்டும் அல்லாது அருகில் உள்ள நூல் நிலையத்தையும் அவர் விட்டதில்லை. வாரம் ஒருமுறை சென்று ஆங்கில புத்தகங்கள் மற்றும் தமிழ் புத்தகங்கள் எடுத்துவருவார். வீட்டில் எல்லாரையும் கேட்பார் அவரவர்க்கு ஏதேனும் புத்தகம் தேவையா என்று. சில நேரம்  பாட சம்பதமாக  புத்தகம் தேவையாக இருந்தாலும் எடுத்துவருவார்.  அவர் அவருடைய நண்பர்களும் சொல்லி வைத்து கொண்டு சில ஆங்கில நாவல்களை தேடி தேடி படிப்பார்கள்.  பின்னர் இரவு நேரத்தில் எங்கள் வீடு வாசலில் கூடி கூடி விவாதிப்பார்கள்.

 அவர் நூலகம் செல்லும் போது அம்மா அவருடன்  யாரையாவது  கண்டிப்பாக அனுப்பி வைப்பார்.  இல்லை என்றால் அவர் நூலகம் மூடும் வரை வீடு திரும்ப மாட்டார்.  தன்னை மறந்து படித்து  கொண்டிருப்பார்.   அதனால் ஒருவர் அவருடன் கூடவே   போய்,   அவரை  சரியான  நேரத்தில்  நினைவுபடுத்தி   வீட்டிற்கு  கூட்டி   வர  வேண்டும்.  பெரும்பாலும் அது நானாகத்தான் இருப்பேன். ஏனென்றால் நான் வீட்டிற்கு கடைசி, மேலும் என்னை மேய்ப்பது அம்மாவுக்கு கஷ்டம்.  இப்படியாக      ஆரம்பித்தது புத்தகங்களுடனான என்னுடைய உறவு.

நெய்வேலியில் பத்தாம் ப்ளோக்கில் இருந்தது அந்த பெரிய நூலகம்.  அதுவும்  பழுப்பு  நிலக்கரி  நிறுவனத்தினுடயதுதான். எங்கள் வீட்டின் அருகில் தான் இருந்தது.  சிறுவர்களுக்கான  ஒரு பகுதியும் அதில் உண்டு.  அப்பா  என்னை கொண்டு  அந்த  பகுதியில்  விட்டு   விடுவார்.   நான் முதலில் படிக்கச் தொடங்கியது "டின் டின்" காமிக்ஸ் தான். இப்போது கூட அந்த வால் பையனும், துரு துரு வென்ற நாய்குட்டியும்,    என்னால்  மறக்க  முடியவில்லை.  அப்புறம் இரும்புக்கை மாயாவி,  Phantom   போன்ற கதைகளும் என்னை வெகுவாக கவர்த்திருந்தன.  பின்னர் நாலாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு போகும் வயதில் நான்சி துருவ், ஹார்டி பாய்ஸ், எனிட் ப்ளிட்டன்  போன்ற கதைகள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்.  இது தவிர தமிழில் வரும் அம்புலி மாமா, பாலமித்ரா, சமபக் போன்ற வற்றையும் விட்டு வைத்ததில்லை. அவையெல்லாம் இப்போது வெளி வருவதில்லை என்று நினைக்கிறேன். வருத்தமாக இருக்கிறது.


நான் படித்த பள்ளியில் பெரிய நூலகம் இருந்தது. ஆங்கில பள்ளி ஆதலால்   பெரும்பான்யமான   புத்தகங்கள் ஆங்கிலமாகவே இருக்கும். எல்லா  வகையான புத்தகங்களும் இருக்கும்.  தமிழ் ஆசிரியாரின் சிபாரிசின் படி சில  நல்ல  தமிழ் நூல்களும் இருக்கும்.  ஆறாம் வகுப்பு முதல் பள்ளி நூலகத்திலும் அனுமதி உண்டு. அந்த வயதில் நான் மு வரதராசன், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் எழுத்துகளை படித்தேன் என்றால் என்னாலேயே இப்போது நம்ப முடியவில்லை. அதற்கு காரணம் என தமிழாசிரியர் நடராஜன் தான்.  நடராசன் என்று சொல்ல வேண்டும், இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும். ஒவ்வொரு வாரம் சில குறிப்பிட்ட புத்தகங்களை படிக்க சொல்லுவார். படித்து விட்டு அதிலிருந்து வீட்டு பாடம் எழுதி வர வேண்டிய  வேலையும்   கொடுப்பார்.  இராஜாஜியின்  சக்கரவர்த்தி  திருமகன் , மற்றும் மகாபாரதம் ,  பாரதியின்  பாஞ்சாலி   சபதம்,  இப்படி  எத்தனையோ  புத்தகங்கள் அவற்றின் அருமை  பெருமை  புரியாமலே  படித்தேன்.

ஆங்கிலத்தில் Tale of  two  cities , Prisioner   of zenda, , Adventures  of  Tom  Sawyer ,  David  copperfield ,  Three  Musketters   என்று  முதலில் ஆரம்பித்தது. பின்னர் பருவ கோளாறில்  mills  and boon  நாவல்களில் வந்து நின்றது. ஒரு கட்டத்தில் காதல் கதைகளை திகட்ட திகட்ட படித்தேன். பின்பு அப்பாவின் உந்துதல் பேரில்   James Hardly  Chase ,  Agatha  Christie  ஆகியோரது  நாவல் கள்  படிக்க  ஆரம்பித்தேன் . கூடவே தமிழில் சுஜாதா, மதன், ஜானகி ராமன், அகிலன், லக்ஷமி, சிவசங்கரி, கல்கி ஆகியோரும் எனக்குள் வளர்ந்தார்கள்.. இதில் சிவசங்கரியின் நண்டு, பாலங்கள் ஆகிய கதைகள் மனதில் இருந்து  இன்னும்  அகலாதவை. பிறகு கல்லூரி நாட்களில் Irwin  Wallace , Robert  Cook ,  Jeffery  Archer   என்று வளர்ந்தது.  பிறகு வேலைக்கு சென்ற போது   சுய முன்னேற்ற புத்தகங்கள் பக்கம் கவனம் திரும்பியது. அப்புறம் நிறைய சுயசரிதைகள்.  இன்று   Ken Follet   இன்   "Fall  of  the  giants "   இல் வந்து  நிற்கிறேன். 

இப்போது கதைகளில் நாட்டம் குறைந்து விட்டது, வரலாறு மற்றும் ஆய்வு கட்டுரைகள் மிகவும் பிடிக்கின்றன.  அதே நேரத்தில் சிறு வயதில் படித்த புத்தகங்களை இப்போது படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை மீண்டும்  படித்தேன், மலைத்தேன்; எவ்வளவு வரலாற்று சமாசாரம் இருக்கிறது. மீண்டும் எல்லா பாகங்களையும் படிக்கச் வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆனால்  இன்றைய தலைமுறையிடம் படிக்கும் பழக்கமே இல்லாமல்  போய்  விடுமோ என்று பயமாக இருக்கிறது. எப்போதும் இணையத்தளம் மற்று கைபேசி துணையுடனே இருக்கிறார்கள். என்    பிள்ளைகளை புத்தகம் படிக்க பழகுவதற்கு படாத பாடு பட்டேன். தினமும் இரவில் கையில் ஒரு புத்தகத்தோடுதான் படுக்க வைப்பேன். தூங்குவதற்கு முன் கண்டிப்பாக எதையாவது படிக்க வேண்டும். காலையில் தினசரியை  கண்டிப்பாக படிக்க வேண்டும். வாரம் ஒரு முறை நூல் நிலையம் அழைத்து செல்வேன். எது வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் கண்டிப்பாக ஏதாவது படிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவேன்.  ஆனால் நான் நிறைய முயற்சி செய்தும் என் மகளை என்னால் புத்தகங்கள் படிக்க  வைக்கவே   முடியவில்லை. அவளை தொலைக்காட்சி மற்றும் கைபேசிடம் இருந்து மீட்க முடியவில்லை.  நிறைய கோவப்பட்டு  பின்னர்  விட்டு   விட்டேன்.   ஆனால் என் மகனிடம் வெற்றி கண்டு விட்டேன் என்றே சொல்ல வேண்டும்.  அவன் நிறைய புத்தகங்கள் படிக்கிறான் என்பதை விட பல தரப்பட்ட நூல்களை  படிக்கிறான்  என்பதே  எனக்கு மன திருப்தியை தருகின்றது. நான் இங்கே புத்தகங்கள் கிடைக்காமல் வருத்த படுவதை கேள்விப்பட்டு அடுத்த வாரத்தில் நண்பர்  மூலமாக அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறான். நானும் காத்திருக்கிறேன்.