Friday, August 26, 2011

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பனே!

இன்று அவன் பிறந்த நாள்.

சரியாக இன்றோடு இருவத்தயிந்து வருடங்கள் ஆகின்றன அவனை பார்த்து. ஆனால் இன்று நடந்தது போலவே மனதில் பசுமையாக உள்ளது. அது கோடை விடுமுறையின் ஒரு மாலை பொழுது. என் வீட்டின் மொட்டைமாடியில் அவன் பெற்றோர்களும்  என் வீட்டாறும்  ஒரு புறம் பேசி கொண்டிருக்க, நாங்கள் இருவரும் மறுபுறம் பேசி கொண்டிருந்தோம் என்று சொல்லுவதை விட  மௌனமாக பார்த்து கொண்டிருந்தோம் என்பதே சரியாக இருக்கும்.

நான் கல்லூரியில்  முதல் வருடம் படித்துகொண்டிருந்தேன். அவன் அதே படிப்பில் வேறொரு ஊரில் மூன்றாம் வருடம். அவனை சந்தித்து சில வருடங்கள் ஆகி இருந்தன. பள்ளிக்கூட நாட்களில் பார்த்தது. அவர்கள் குடும்பமும் எங்கள்  குடும்பமும் நெடுங்காலமாக நண்பர்கள். வேலை நிமித்தம் மாற்றலாகி அவர்கள் எங்கள் சிறிய ஊரிலிருந்து சென்னைக்கு போய் விட்டனர். அன்று அவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு எங்கள் வீட்டிற்கும் வந்திருந்தனர்.
 
மாடி சிறிய மதில் சுவரின் மேல் ஒரு காலை அந்தபுறமும் மறு காலை இந்த புறமுமாக போட்டு அமர்ந்திருந்தான். நானும் தளர்வாக சுவற்றில் சாய்ந்தவாறு நின்றிருந்தேன். அழகான வாலிபனாக வளர்ந்திருந்தான் அவன்.

ஏதேதோ கேள்விகள் கேட்டான், நான் ஒரிரு வார்த்தைகளில் பதில் அளித்துகொண்டிருந்தேன். ஏன் ஒற்றை பின்னலுக்கு மாறி விட்டாய், இன்னும் சிறிது நாள் தாவணி அணியலாமே, ஏன் அதற்குள் புடவை, நீயும் ஏன் என் படிப்பை தேர்ந்தெடுத்தாய்,  போன்ற கேள்விகள்.

அவன் கண்களில் கனிவும் காதலும் மின்னியதை என்னால் நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை.  சிறிது நேரம்  பேச முடியாமல் நின்று கொண்டிருந்தேன். என்னுடன் பேச பிடிக்கவில்லையா என்று கேட்டான். அதற்கும் பதில் இல்லை.

ஏன் என் கடிதங்களுக்கு பதில் இல்லை என்று திடீரென கேட்டான். இந்த கேள்வியை எதிர்பார்த்தே நான் பயந்து கொண்டிருந்தேன். என்னுடைய விடுதி முகவரிக்கு அவன் அனுப்பிய கடிதங்கள் அவை. அவன் உள்ளத்தை வெளிபடுத்தி என் சம்மதத்தை கேட்டிருந்தான். படிக்க இன்பமாக இருந்தாலும் பதில் எழுத துணிவில்லை. மிகவும் கண்டிபான, காதல் செய்வது தவறு என்று போதித்து வளர்க்கபட்டு இருந்தேன். இதற்கும் மௌனம் காத்தேன்.

சரி விடு, என் பிறந்த நாள் நினைவிருக்கிறதா என்று கேட்டான். தலைஅசைத்து தேதியை சொன்னேன். சரியாகத்தான் சொன்னேன் இருந்தாலும் அவன் முகத்தில் ஏமாற்றம் கலந்த வருத்தம்,ஆயாசம்.  ஏனென்று எனக்கு புரியவில்லை.

என் பெயருக்கு ஒரு பொருள் உண்டு தெரியுமா என்று கேட்டான். எனக்கு தெரியவில்லை. சூரியனை குறிக்கும் வடமொழிசொல் தான் என் பெயர் என்றான். நீ சூரியனை பார்க்கும் போதெல்லாம் என்னை நினைத்து கொள்வாயா என்று கேட்டான்.

விடை பெறும் வேளை வந்தது. அவன் குடும்பத்துடன் பேருந்து நிலையம் நோக்கி செல்வதை மாடியிலிருந்து பார்த்து கொண்டிருந்தேன். சாலை திருப்பத்தில் பார்வையிலிருந்து மறையும்  முன்பு ஒரு முறை திரும்பி பார்த்தான். என் மனதில் இனம் புரியாத ஒரு வலி.

மெள்ள இறங்கி வீட்டுக்குள் வந்தேன். தற்செயலாக கண்கள் நாள்காட்டி பக்கம் சென்றதும் அதிர்ந்தேன், கண்களில் கண்ணீருடன் உணர்ந்தேன் அன்றுதான் அவனுடைய பிறந்த நாள் என்று. கோடை விடுமுறையாதலால் நாட்கள் மற்றும் தேதியை பற்றிய நினைவே இல்லாமல் அவனை காயப்படுத்தி விட்டதை எண்ணி துடித்தேன்.

அதன் பிறகு அவனை திரும்ப பார்க்க முடியவில்லை. அவன் என்னை தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் வந்த மிக முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அவன் பெற்றொர் வந்தனர், அவன் வரவில்லை. அவர்கள் வருவதும் மெல்ல குறைந்து, நின்றும் விட்டது. தொலைபேசி மற்றும் பிற வசதிகள் இல்லாத காலம் ஆதலால் மெதுவாக தொடர்பு அற்று போய்விட்டது.

ஆனால் ஒரு வருடம் கூட நான் தவறியதில்லை, அவனுக்கு  பிறந்த நாள் வாழ்த்து சொல்ல!

இதோ இன்றும் அவன் பிறந்த நாள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பனே, என்று சூரியனை பார்த்து சொல்லுகிறேன்.

கண்களில் கண்ணீர், சூரியன் சுட்டதால் அல்ல.

No comments:

Post a Comment